Sunday 19 May 2024

தமிழ் இனத்தின் முக்கிய பாதுகாப்பு அரண் என்ன?

 உங்களுக்கு ஒன்று தெரியுமா? தமிழ் மொழிக்கு பலவிதமான சிறப்புகள் உள்ளன என்பது எல்லோரும் அறிந்ததே. அதில் முக்கியமான ஒன்று என்னவென்றால், அந்த மொழியை பேசும் தமிழ் இனத்தை அழிவினின்று பாதுகாக்கும் ஒரு பெரும் படையாகவும், பாதுகாப்பு அரணாகவும் தமிழ் மொழி இருப்பது தான்

அதாவது தமிழை கைவிடாமல், எல்லா சூழ்நிலையிலும், தமிழையே பேசிக் கொண்டிருந்தால், தமிழினத்தை ஒரு காலத்திலும் அழிக்க முடியாது  என்னும் பெரும் உண்மையை தமிழ் இனம் உணர்ந்ததால் தான் , தமிழை எப்போதும் போற்றி பெருமைப்படுத்தி கொண்டிருந்தார்கள்.

 இப்படி தமிழ் மொழி, தமிழர்களுக்கு ஒரு பெரும் பாதுகாப்பு படையாக  செயல்படுவதை அறிந்த தமிழினத்தின் எதிரிகள், தமிழ் இனத்தை வீழ்த்த ஒரே வழி, அவர்களுடைய மொழியை முதலில் அழிப்பது தான் என்பதை அறிந்து வைத்திருந்தார்கள் /வைத்திருக்கிறார்கள். அதனால் தான் ஆரியர்கள், வடமொழியை புகுத்தி தமிழ் இனத்தை அழிக்க முற்பட்டார்கள். இப்போது பல ஆரியர் அல்லாதவர்கள், குறிப்பாக  தெலுங்கர்கள்,அதே உத்தியை பயன்படுத்தி, வடமொழியான சமஸ்கிருதத்தை கொண்டு, தமிழர்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.

ஆக , தமிழர்கள் தங்கள் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற  எளிதான ஒரு வழி என்னவென்றால், எல்லோரும் சமஸ்கிருதம் கலக்காத தமிழ் மட்டும் பேச வேண்டும். உடனே, இனத்தின் விடுதலை ஆரம்பமாகிவிடும்.

 தமிழர்களுக்கு எதிராக போரிடுபவர்கள், ஒரு நாளும் படைக்கலன்களோடு வந்து நேரடியாக போராடுவதில்லை . அப்படி வந்தால் அது  தமிழர்களுக்கு எதிரான போர் என்று தெரிந்துவிடும். மாறாக, மறை முகமாக கருத்தியல் ரீதியாக போர் தொடுத்து, அதை தொடர்ந்து தினமும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இது ஒரு மறைமுகப் போர் என்பதால், அதனால் தாக்கப்பட்டு பலவீனப்பட்டு கொண்டிருக்கும் தமிழர்களுக்கு அது தெரிவதில்லை. அப்படி ஒரு உணர்வு வருவதும் இல்லை.இதை அவர்கள் தினமும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.அந்த மறைமுக போருக்கு,முக்கியமான ஆயுதம் என்னவென்றால்  சமஸ்கிருத சொற்கள் தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.  சமஸ்கிருத சொல்லுக்கு அழிக்கும்/குழப்பும்  பெரும்  திறன் உள்ளது என்பது இதை தீர ஆராய்ச்சி செய்த மொழி அறிஞர்களுக்கு மட்டும்தான்  தெரியும். 

நான் என்ன சொல்கிறேன் என்பது பலருக்கு இன்னும் புரியாமல் இருக்கலாம். ஆதலால் அதை விளக்கு முகமாக ஒரு சிறிய எடுத்துக்காட்டை சொல்லுகிறேன்.

சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை பற்றி சொன்ன ஒரு கருத்து அகில இந்திய அளவில் பேசு பொருளாக மாறி நீதிமன்றத்திற்கு கூட சென்று விட்டது. அவர் சொன்ன கருத்துக்கு எதிராக பலர்  காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளார்கள் .அவர் அப்படி என்ன தான்  சொன்னார்.

"கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித் தான் இந்த சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம். சனாதனம் என்றால் என்ன? சனாதனம் என்கிற பெயரே சமஸ்கிருதத்தில் இருந்து வந்ததுதான். சனாதனம் சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானது.சனாதனம் என்பதன் அர்த்தம் என்ன? நிலையானது, அதாவது மாற்ற முடியாதது. யாரும் கேள்வி கேட்க முடியாது என்பதுதான் சனாதனத்திற்குரிய அர்த்தம். எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். எதுவுமே நிலையானது கிடையாது எல்லாவற்றுக்கும் நாம் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காக உருவான இயக்கம்தான் இந்த கம்யூனிஸ்ட் இயக்கமும், திராவிட முன்னேற்ற கழகமும் "என்று பேசினார்.

ஆதாரம் :https://tamil.oneindia.com/news/chennai/udhayanidhi-stalin-sanatana-dharma-row-did-rahul-gandhi-call-a-senior-dmk-leader-on-the-issue-536093.html

"சனாதனம் என்பதன் அர்த்தம் என்ன? நிலையானது, அதாவது மாற்ற முடியாதது. யாரும் கேள்வி கேட்க முடியாது என்பதுதான் சனாதனத்திற்குரிய அர்த்தம்."என்று அவர் சொன்னதற்கு எந்த அடிப்படை ஆதாரமும் கிடையாது .இதோ சனாதனம் என்கிற சமஸ்கிருத சொல்லுக்கு அகராதி தரும் பொருள்.


ஆதாரம்: Sanskrit Dictionary  

ஆக, சனாதனம் என்கிற ஒரு சொல்லே  சமஸ்கிருதத்தில் கிடையாது என்பது தெளிவாகிறது. அப்படி இல்லாத ஒரு சொல்லுக்கு, ஒரு இல்லாத பொருளை கற்பித்து ,ஒவ்வொருவரும் அவரவர் வசதிக்கு தகுந்தாற்போல் அதை பொருள் கொள்வது, சமஸ்கிருதத்தின் ஒரு தனி குழப்பும்/அழிக்கும்  திறன் என்று சொல்லலாம். இந்த சொல்லுக்கு அதிகாரப்பூர்வமான ஒரு பொருள் இல்லாத வரை யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் அதை பொருள் கொள்ளலாம். அவ்வாறு இருக்கையில் எந்த அடிப்படையில் அவர் பேசியது தவறு என்று சொல்ல முடியும் ?

அப்படி ஒரு குழப்பமான  சிந்தனையை விதைக்கும் திறன் தான் சமஸ்கிருத சொற்களுக்கு உள்ளது. இப்போது இதையே தமிழாக்கி பேசினால் என்ன ஆகும்? முயன்று பாருங்கள். தமிழில் அப்படி ஒன்றும் பேச முடியாது. தமிழில் என்ன பேசினாலும் அதற்கு ஒரு நேரடி பொருள்தான் கற்பிக்க முடியும். குழப்பமான பொருள் கற்பிக்க முடியாது. இந்த ஒரு சொல்லைக் கொண்டு சமஸ்கிருத சொற்களின்  திறனை ஓரளவு புரிந்து இருப்பீர்கள் என நினைக்கிறேன்.

அதுபோல இன்னொரு சொல்லை பார்ப்போம். JUSTICE  என்ற ஆங்கில சொல்லுக்கு நிகராக சமஸ்கிருதத்தின் சொல் 'தர்மம்' என்பதாகும் . ஆனால், தர்மம் என்பதன் மக்கள் புரிந்து கொண்ட பொருள் என்னவென்றால்' அநியாயம்'என்பதாகும் .ஏனென்றால், தர்மம் என்றால்' சாதிக்கேற்ற நீதி', அப்படியென்றால் ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு நீதி!அது ஆங்கிலத்தில் INJUSTICE .ஆக ,JUSTICE என்ற வார்த்தைக்கு சமஸ்கிருதத்தில் INJUSTICE என்ற ,நேர் எதிர்மறையான பொருள் கொண்ட ஒரு சொல்லை பயன்படுத்துகிறார்கள்!😂😂

 இனி, இதை போல் தமிழ் இனத்திற்கு முக்கியமான இன்னொரு சொல்லுக்கு வருவோம்.தமிழ்நாட்டில் வாழும் மற்ற மாநிலத்தவர், குறிப்பாக தெலுங்கர்கள், கடந்த சுமார் 50 வருடங்களாக தமிழர்களை அடிமைப்படுத்தி ஆண்டு கொண்டிருக்கிறார்கள். ஆனால்,தெலுங்கர்கள் தான் நம்மை ஆண்டு கொண்டிருக்கிறார்கள் என்பதே பல தமிழர்கள் இன்னும் உணரவில்லை. உணர முடியவில்லை.பல தமிழர்கள் அந்தத் தகவலையே  சந்தேகத்துடன் தான் கேட்கிறார்கள். பல தமிழர்கள் அதை இன்னும் நம்புவதில்லை. இதற்கு என்ன காரணம்? 

 இப்படி 5% தெலுங்கர்கள் ,85% தமிழர்களை எளிதாக ஆள்வதற்கு, அவர்களிடம் தனியாக ஒரு பெரும் படையோ அல்லது ராணுவமோ  இல்லை .தெலுங்கு விட்டலாச்சாரியா படங்களில் வருவது போல் ஒரு மாய மோகினியும்  மந்திரக்கோலும் இல்லை.பின்னர் எதைக் கொண்டு அவர்கள் தமிழர்களை ஆள்கிறார்கள் ?

அவர்களின் வெற்றிக்கு காரணம் ஒரே ஒரு  சமஸ்கிருத சொல் தான் ! அவர்களைப் பொறுத்தவரையில் அது ஒரு மந்திரச்சொல். அதைக் கொண்டுதான் வீழ்த்த முடியாத  தமிழ் இனத்தை வீழ்த்தி விட்டார்கள்!அந்த மந்திர சொல் தான் திராவிட என்னும் சொல்.அப்படி அந்தச் சொல்லில்   என்னதான் இருக்கிறது? இதோ இதை படித்து பாருங்கள்.புரியும் .

திராவிடம் என்ற பெரும் சூழ்ச்சி 

 இந்த அரசை 'திராவிட மாடல் 'அரசு என்று சொல்கிறார்கள்.நாங்கள் 'திராவிட'இனத்தை சேர்ந்தவர்கள் என்று சொல்லுகிறார்கள் . இப்போது நடப்பது 'திராவிட ஆட்சி 'என்று சொல்கிறார்கள். உண்மையில் தெலுங்கர்கள் தான் ,இந்த திராவிட முகமூடி அணிந்து நம்மை ஆள்கிறார்கள் என்பது  ஏன் நமக்கு தெரிவதில்லை?ஏனென்றால், தமிழர்களும் அந்த திராவிட இனம் தான்  என்று  காலம் காலமாய் பொய் சொல்லி தமிழர்களை எல்லாம் நம்ப வைத்திருக்கிறார்கள் . நான் கூட என் பள்ளி நாட்களில், தமிழர்கள் என்பவர்கள் திராவிடர்கள் என்று தான் நம்பிக்கொண்டிருந்தேன். ஆண்டாண்டு காலமாக தொடர்ச்சியாக அவ்வாறு சொல்லி, தமிழர்கள்,தெலுங்கர்கள் எல்லாம் ஒரே இனம் தான். இந்த இனத்தின் பெயர் தான் திராவிடம் என்று ஒரு மா பெரும் பொய்  சொல்லி,அதைக் கருவியாக  கொண்டு நம்மை ஆண்டு கொண்டிருக்கிறார்கள். ஆக, 5% தெலுங்கர் நம்மை ஆளும் போது, நம் திராவிட இனம் தான் நம்மை ஆளுகிறது என்ற ஒரு மாயையை உருவாக்கி நம்ப வைத்து விட்டார்கள்.

இந்த சூழ்நிலையில், அவர்களை எப்படி வீழ்த்துவது? முள்ளை முள்ளால் தான் எடுக்க  முடியும். அதுபோல சொல்லை சொல்லால் தான் வீழ்த்த முடியும். எந்த சொல்லினால் அவர்கள் ஆட்சிக்கு வந்தார்களோ,அந்தச் சொல்லை தமிழர்கள் பயன்படுத்தாமல், அதற்குப் பதில், அதற்கு நிகரான தமிழ் சொற்களை பயன்படுத்தினால் போதும். உடனே விடுதலை ஆரம்பமாகிவிடும் .எப்படி ?

 தமிழர்கள் எல்லோரும் தங்களுடைய பேச்சில்/ வழக்கில் தமிழ் சொற்களை மாத்திரம் பயன்படுத்த வேண்டும் .எந்த காரணம் கொண்டும் சமஸ்கிருத சொல் பயன்படுத்தக்கூடாது. அப்படி செய்யும் போது ,'திராவிட மாடல்' என்பது தமிழாக்கினால் 'தெலுங்கர் மாடல் 'என்று வரும்! ஆக,தமிழர் மாடல் அல்ல என்பது வெட்ட வெளிச்சம் ஆகிவிடும். 'திராவிடர் ஆட்சி' என்று சொன்னால் அதை தமிழில் 'தெலுங்கர் ஆட்சி'என்று சொல்ல வேண்டியிருக்கும் . உடனே தெரிந்து விடும், 85 சதவீத தமிழர்களை 5 சதவீத தெலுங்கர்கள் தான் ஆண்டு கொண்டிருக்கிறார்கள் என்ற பெரும் உண்மை எல்லோருக்கும் தெரிய ஆரம்பித்துவிடும். 'திராவிட கழகம்' என்றால்' தெலுங்கர் கழகம்'என்று தமிழில் வந்துவிடும். 'திராவிட முன்னேற்றக் கழகம்' என்று சொன்னால் 'தெலுங்கர் முன்னேற்ற கழகம்' என்று பொருள்படும்.ஆக தமிழர் கட்சி அல்ல திமுக என்பது தெரிந்து விடும். தமிழர் கட்சி என்றால் ' தமிழர் முன்னேற்ற கழகம் 'என்று பெயர் வைக்கலாமே !ஏன் வைக்கவில்லை என்ற கேள்வி எழும். 

இந்த கருத்து உருவாக்கம் வலுப்பெற்று இறுதியில் ,தமிழர் VERSUS  தெலுங்கர் என்னும் அரசியல் நிலைப்பாடு  வெட்ட வெளிச்சம் ஆகிவிடும். கே.என். நேரு என்றால் தெலுங்கர் என்று சொல்ல வேண்டி இருக்கும். கருணாநிதி என்றால் தெலுங்கர்  என்று சொல்ல வேண்டியிருக்கும்.வைகோ , வெங்கடேசன், விஜயகாந்த் எல்லோரும் தெலுங்கு மன வாடு கூட்டம் என்பது மக்களுக்கு தெரிய வரும்.

 மொத்தத்தில் இதுவரை மறைத்து வைத்திருந்த உண்மைகள் எல்லாம் அம்பலம் ஆகிவிடும். தேர்தல் சமயத்தில் தமிழர்கள் எல்லோரும் தமிழர்களுக்கு மட்டும் வாக்களியுங்கள்,தெலுங்கர்களுக்கு வேண்டாம் என்ற முறையில் வெளிப்படையாக பிரச்சாரம் செய்யலாம். தெலுங்கர்கள் இதுவரை செய்து வந்த ஏமாற்று வேலை ஒவ்வொன்றும் தெரிய ஆரம்பிக்கும். இறுதியில் தமிழ் தேசியம் மலரும்.

 அந்த ஒரு சொல் அப்படி ஒரு பெரிய மந்திரம் சொல்லாக இருக்கிறது. எங்கெங்கு திராவிடம் என்று சொல் வருகிறதோ  அங்கங்கு அதற்கு ஏற்ற தமிழ் சொல்லை பயன்படுத்தி பாருங்கள்.வெற்றி நிச்சயம். இதை ஒரு தனித்தமிழ் இயக்கமாக கொண்டு வந்து பிரபல படுத்த வேண்டும். அப்போதுதான் தமிழ் மொழி எப்படி தமிழர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கிறது,தமிழை விட்டுவிட்டு வேறு மொழி சொற்களை பயன்படுத்தினால் தமிழனை அடிமையாக்கி விடலாம் என்ற  பெரும்  உண்மையை தமிழர்  உணர ஆரம்பிப்பார்கள்.இறுதியில் ,தமிழினால் பாதுகாக்கப்பட்ட, ஒரு வீழ்த்த முடியாத, இனமாக தமிழர்கள் மாறிவிடுவார்கள். அப்படித்தானே அவர்கள் இருந்தார்கள் சமஸ்கிருதம் என்ற மொழி வரும் வரை!

Thursday 3 August 2023

வடக்கர்களின் பயங்கர படையெடுப்பு ---தமிழர்கள் பிழைப்பார்களா?

அண்ணாத்துரை அன்று சொன்னார் ' வடக்கு வளர்கிறது ; தெற்கு தேய்கிறது!'என்று. இன்று நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. தற்போது வடக்கு வந்து தெற்கில் வளர்கிறது! அதைவிட இது மிகுந்த ஆபத்தாகும். ஏனென்றால், அங்கு வளர்ந்தால் அது அவர்கள் நிலத்தில். இங்கு வளர்வது நம் நிலத்தில். மெல்ல மெல்ல நம் நிலம் பறிபோகும் அபாயத்தில் தமிழ்நாடு இப்போது இருக்கிறது. இந்திய துணை கண்டம் முழுவதும் ஒரு காலத்தில் தமிழர்கள் தான் இருந்தார்கள். இருந்த நிலத்தை மெல்ல மெல்ல இழந்து, இப்போது கடைக்கோடி தமிழகத்தில் ஒரு மூலையில் வாழ்கிறார்கள். அதையும் இழந்து விட்டால்? குமரிக்கடல் தான் உள்ளது.😭

 எங்கும் தமிழ் எதிலும் தமிழ்! என்று வாய்கிழிய சொன்னவர்கள் எல்லோரும், இப்போது எங்கும் வடக்கர்கள் எதிலும் வடக்கர்கள்! என்று இருப்பதை கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள். பாஜகவின் தலைவர் அண்ணாமலை சொல்லி இருக்கிறார் ' தமிழர்களும் வடக்கே வேலை நிமித்தம் சென்றிருக்கிறார்கள். பெங்களூருவில் இருக்கிறார்கள். அதுபோலத்தான் இதுவும் ' என்று சொல்லி இருக்கிறார். அவர் சொல்வது உண்மைதான். இந்தியா முழுவதும் வெவ்வேறு மாநிலங்களில் தமிழர்கள் வேலை நிமித்தம் வாழ்கிறார்கள்.

ஆனால், அவர்கள் அங்கு எப்படி வாழ்கிறார்கள்? அவர்கள் அங்கு போய் தமிழை திணிப்பதில்லை. எங்கும் அவர்கள் வடக்கர்களை தாக்குவதில்லை.ஏடிஎம் கொள்ளையடிப்பதில்லை. எங்கும் அவர்கள் பெரும் சொத்துக்கள் வாங்கி குவிப்பதில்லை. எங்கும் அவர்கள் பெரிய கல்லூரிகளையும் ஷாப்பிங் மால் களையும் வாங்குவதில்லை. எங்கும் அவர்கள் வடக்கர்களை ஆள்வதில்லை. எங்கும் அவர்கள் அரசியல் அதிகாரம் கொண்டவர்களாக இல்லை. எங்கும் அவர்கள் கோடிக்கணக்காக எண்ணிக்கையில் இல்லை. எங்கும் அவர்கள் அங்குள்ள அரசியலை தீர்மானிப்பவர்களாக இல்லை. அவர்கள் வேலை செய்யும் இடங்களில் எல்லாவற்றிலும் தமிழைக் கூட சத்தமாக பேச முடியாமல் அடங்கி ஒடுங்கி சிறு சிறு வேலை செய்வார்கள். அவர்கள் உண்டு அவர்கள் வேலை உண்டு என்று இருப்பார்கள். அதுதான் தமிழர்கள். மும்பையில் இந்தியில் தான் பேசுவார்கள். அகமதாபாத்தில் குஜராத்தியில் பேசுவார்கள். அங்கு போய் ஆதிக்கம் செலுத்த மாட்டார்கள். அதுதான் தமிழர்கள்! 

ஆனால், இங்கு வாழும் வடக்கர்கள் எப்படி வாழ்கிறார்கள்? அவர்கள் இங்கு தமிழ் பேசவே மாட்டார்கள். மண்ணின் மைந்தரான தமிழர்களை ஓட ஓட விரட்டி அடிப்பார்கள். இங்கிருக்கும் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட மாட்டார்கள். டிக்கெட் எடுக்காமல் ரயிலில் பயணிப்பார்கள். கேட்டால் சண்டைக்கு வருவார்கள். இங்கு வாழ்ந்து கொண்டு, தமிழர்களுக்கு எதிரான பாஜகவிற்கு வாக்களிப்பார்கள். தமிழ்நாட்டில் வந்து அடாவடித்தனம் செய்வார்கள். அப்படியான அவர்கள், விரைவில் இங்குள்ள அரசியல் அதிகாரத்தை தீர்மானிக்க போகிறார்கள். இதுதான் தமிழர்கள் வெளிமாநிலங்களில் இருப்பதற்கும், வடக்கர்கள் தமிழ்நாட்டில் இருப்பதற்கும் உள்ள பெரும் வித்தியாசம் என்பது. இது கர்நாடகாவில் இருந்து வந்த அண்ணாமலைக்கு தெரிய வாய்ப்பில்லை. அவர் சொல்கிறார் 'யார் குறைந்த பணத்திற்கு வேலை செய்கிறார்களோ அவர்களை அனுமதிப்பதுதான் பொருளாதார விதி ' என்று. இந்தியாவின் சாலை பணிகளில், தினமும் 50 ரூபாய்க்கு வேலை பார்க்க சீனர்கள் தயாராக இருக்கிறார்கள்! நாம் அவர்களை இந்தியாவிற்குள் அனுமதிக்கலாமா? ஏன் அனுமதிக்கவில்லை? ஏனென்றால், இந்தியர்களுக்கு வேலை இல்லாமல் போய்விடும் என்பதால். அமெரிக்காவில் வேலை செய்ய இந்தியர்களுக்கு ஏன் விசா கட்டுப்பாடுகள் உள்ளது? ஏனென்றால் அங்குள்ள அமெரிக்கர்களுக்கு வேலை இல்லாமல் போய்விடும் என்ற காரணத்தினால் தான்.அதே மாதிரி தான் தமிழ்நாட்டில் வடவர்கள் வந்தால் தமிழர்களுக்கு வேலை இல்லாமல் போய்விடும் என்பதால், தமிழர்கள் வேலை வாய்ப்புகளை பாதுகாக்க வடக்கர்கள் பெருமளவில் வருவதை கட்டுப்படுத்துவது நிச்சயமாக அவசியப்படுகிறது. தமிழர்களுக்கு வேலைவாய்ப்புகளில் 90 % இட ஒதுக்கீடு சட்டம் கொண்டு வர வேண்டும். ஆட்சிக்கு வந்தால் அவ்வாறு ஒரு சட்டம் கொண்டு வருவோம் என்று திமுகவினர் அப்போது சொன்னார்கள். இதுவரை அவர்கள் ஏன் கொண்டு வரவில்லை என்று தெரியவில்லை.

 ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு இனக்கணக்கு அடிப்படை உள்ளது.இதை ஆங்கிலத்தில் demographic profile என்பார்கள்.எடுத்துக்காட்டாக தமிழ்நாட்டில்

 தமிழர்கள் 85% தெலுங்கர்கள் 6% மற்றவர்கள் 9% என்று இருப்பதாக வைத்துக் கொள்வோம். இதை மாற்றுவதற்காக வடக்கே இருந்து குடியேற்றம் நடந்து தமிழர்கள் 60%, வடக்கர்கள்  30% தெலுங்கர்கள் 8% மற்றவர்கள் 2% என்று ஆகிறது என்று வைத்துக்கொள்வோம்.இதனால் அரசியல் அதிகாரம் யார் கையில் உள்ளது என்பதில் ஒரு மாற்றம் ஏற்படும்.இது சமூக குழப்பங்களுக்கு வித்திடும். வடக்கர்கள் தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய பங்குகளை அபகரித்துக் கொள்வார்கள். இதனால் இனக் கலவரம் ஏற்படலாம். ஆக இனக்கணக்கு விகிதாச்சாரம் மாறுவதற்கு நாம் அனுமதிக்க கூடாது. அந்த கணக்கை காப்பாற்ற வேண்டும் என்றால், தமிழர்களுக்கு எல்லா துறைகளிலும் 90% இட ஒதுக்கீடு வேண்டும்.இது மாதிரியான சட்டங்கள் பல மாநிலங்களில் ஏற்கனவே நடைமுறையில் உள்ளன. வடகிழக்கு மாகாணங்களில் உள்ளே செல்ல வேண்டுமென்றால் இன்னர் லைன் பர்மிட் என்று ஒன்று எடுக்க வேண்டும். இங்கிருந்து நாம் எல்லோரும் போய் கோடிக்கணக்கில் அங்கு போய்வாழ முடியாது. அதேபோன்று ஒரு பெர்மிட்டு முறை தமிழ்நாட்டிற்கும் நடைமுறைப்படுத்தலாம். தமிழர்களின் நலனில் குறியாக இருக்கும் தமிழக முதல்வர், நிச்சயமாக இந்த மாதிரி முறைகளை அமல்படுத்துவார் என்று எதிர்பார்க்கலாம். அதேபோல் இட ஒதுக்கீடும் உடனே செய்வார் என்று தமிழக மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறார்கள்.

எது எப்படியோ,அடுத்த தேர்தலில் தமிழர்களை காப்பாற்ற உறுதிமொழி கொடுக்கும் கட்சிக்குதான் நிச்சயமாக தமிழர்கள் வாக்களிப்பார்கள் என்பது உறுதி. திமுக தான் கடந்த 50 வருடங்களாக தமிழர் நலனை முன்னிறுத்தி அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆதலால் அவர்கள் நிச்சயமாக தமிழர்களை காப்பாற்ற உறுதிமொழி கொடுத்து அதை நிறைவேற்றுவார்கள் என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்து. திமுக வடக்கர்களின் கூட கைகோர்த்து தமிழர்களை பின் தள்ளி விடுவார்கள் இன்று ஒரு கூட்டம் தப்பு பிரச்சாரத்தில் ஈடுபடுகிறது. திமுகவை பற்றி நன்கு அறிந்தவர்கள் அதை நிச்சயம் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். சமீபத்தில் வடக்கர்கள் தமிழர்களை தாக்கிய ஒரு சம்பவத்தில், திமுக அரசு உடனே தலையிட்டது மறக்க முடியாது. வடக்கர்களை உங்கள் ஊருக்கு போங்கள் என்று சொன்ன தமிழரை உடனே அரசு கைது செய்ததையும் மறக்க முடியாது. ஆக வரப்போகும் தேர்தலில்,  திமுக இந்தப் பிரச்சினையை நிச்சயமாக கையில் எடுப்பார்கள் என்பது தமிழர்கள் எதிர்பார்ப்பு. அது நியாயமான எதிர்பார்ப்பு தான்.

Saturday 1 July 2023

வங்கி வாடிக்கையாளர் சேவையின் உச்சம் !

 ஒரு காலத்தில், குனிந்த தலை நிமிராத பெண்கள் தமிழ்நாட்டில் இருந்தனர் என்று சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன் . இன்னும் அந்த வகைப் பெண்கள் தமிழ்நாட்டில் உள்ளனரா? இல்லை என்றுதான் நீங்கள் சொல்வீர்கள், வங்கிக் கிளைகளுக்குள்  நுழையும் வரை! ஆம், அங்கு இருக்கும் ஊழியர்கள்,  ஆண்களோ, பெண்களோ,  குனிந்த தலை நிமிராமல், வேலை பார்ப்பவர்கள். அவர்கள் நிமிர்ந்து பார்க்க மாட்டார்களா, என்று ஏக்கத் துடன்  காத்துக் கொண்டிருக்கும், பரிதாபத்துக்குரிய வாடிக்கையாளர்கள் அவர்கள் முன்னால்  ! இதுதான் இன்றைய வங்கி சேவையின் இயல்பான நிலை. இதுதான் இன்றைய, வங்கி வாடிக்கையாளர் சேவையின் படம் ! ஆனால், 1980களில், நிலைமையே வேறு! நம்ப முடியவில்லையா? இதோ என் கதை!

                                                   1984 லிலிருந்து 1986 வரை நான் ஒரு பெரிய வங்கியின்  , தனிநபர் வங்கியியல்  மேலாளராக பணியாற்றிக் கொண்டிருந்தேன்.கேரளா எல்லையில் இருந்த அந்த வங்கி கிளையில் எப்போதும் கூட்டம் அலைமோதும் .காலை 9 வாக்கில் நான் வங்கிக்குள் நுழைய முற்பட்டால் ,ஒரு  300  பேராவது என் வழியை மறைத்துக்கொண்டு நிற்பார்கள் .வங்கி காவலர் சத்தம் போட்டு எனக்கு வழி வகுத்து கொடுப்பார் !

                                       அந்த வங்கி  கிளையில் வெளி நாட்டு இந்தியர்களின் கணக்கு (NRE )நிறைய இருந்தன .அந்தக் கணக்குதாரர்களுக்கு நான் ஒரு உற்ற நம்பிக்கையான குடும்ப நண்பனாக சேவை செய்தேன் .பொதுவாகவே  பணக்காரனோ  ஏழையோ யாராயிருந்தாலும் அவர்களுக்கு என் மனதார முடிந்த அளவு உதவி செய்வது என்பது என்னுடைய இயல்பு. வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு மேலும் சிறப்பான சேவை நான் செய்வதற்கு காரணம் அவர்கள் தங்கள் குடும்பங்களை இங்கே விட்டுவிட்டு தனியாக அங்கு சென்று அல்லும் பகலும்  உழைத்து ,குடும்பத்திற்க்காக  பணம் அனுப்புகிறார்கள். அவர்கள் முற்றிலும் நம்பி இருப்பது இந்த வங்கியை  தான். இந்த பணம் போய் அவர்கள் குடும்பத்தில் சேர்ந்த பின்னர் தான்  அவர்களுக்கு செய்ய வேண்டிய  காரியங்கள் எல்லாம் செய்ய வேண்டும். அது எவ்வளவு முக்கியம் என்பதை அவர்களுடைய பார்வையில் நான் எப்போதும் பார்ப்பேன் . ஆதலால் NRE  என்று சொல்லப்படும் அந்த வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த சிறப்பான சேவை எப்போதும்  செய்வேன் .அவர்கள் அனுப்பும் காசோலை  வந்தவுடன் அந்த இடத்திலேயே ஒரு அச்சடித்த பதிலை அவர்களுக்கு அனுப்பி விடுவேன். ஆதலால் அவர்கள் எல்லோருமே என்னுடைய சேவைக்காக எப்போதும் பாராட்டி கொண்டே இருப்பார்கள். அப்படி ஒரு தனி சிறப்பான சேவை நான் கொடுத்துக் கொண்டிருந்தேன் .அவர்கள் குடும்பத்தினரும்  என்னை தங்கள் குடும்பத்தில் ஒரு ஆளாகவே எடுத்துக் கொள்வார்கள். நான் அவர்கள் வீட்டிற்கு சென்று பலமுறை உதவி செய்திருக்கிறேன். பல வீடுகளில் சாப்பிட்டு இருக்கிறேன். அந்த அளவுக்கு நெருக்கமாக அவர்களுடன் இருந்தேன் .

இப்படி இருக்கையில் ஈரான் ஈராக்  போர் 1984இல் வெடித்தது. ஈரானில்  எங்கள் வங்கியின் ஒரு முக்கியமான வாடிக்கையாளர்  வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.அவர் தங்கியிருந்த இடத்தில் மேலே குண்டு போட்டு போர் நடந்து கொண்டிருக்கிறது.அவருக்கு ஒரே பயம் .எப்போது வேண்டுமானாலும் எதுவும் நடக்கலாம் .அவர் உயிர் கூட போய்விடலாம் .அப்படி ஒரு பயங்கரமான சூழ்நிலை.அப்படி போனால் குடும்பத்தை யார் பார்ப்பார்கள் ? யாரை நம்பி அவர் சொத்துக்களை கொடுக்க முடியும் ?உறவினர்கள் எல்லோரும் துரோகிகளாக இருந்தார்கள். அவருக்கென்று ஒருவருமே இல்லை என்ற நிலை. 

இந்த சூழ்நிலையில் அவர் என்ன செய்தார் தெரியுமா?அப்போது எல்லாம் சின்ன  டைப்ரைட்டர் உண்டு . அவசர அவசரமாக, குண்டு மழை ஒரு பக்கம் பொழிந்து கொண்டிருக்கும்போது , தன்னுடைய ஒரு பக்க உயிலை டைப் அடித்து  அங்கிருந்த இரண்டு ஊழியர்களை சாட்சி கையெழுத்து போட வைத்து , அதை அப்படியே ஒரு கவரில் வைத்து, குண்டு மழை ஓய்ந்திருக்கும் நேரத்தில் தபாலில் சேர்த்தார் .அப்போதெல்லாம் அவ்வாறான தபால் இந்தியா வந்து சேர்வதற்கு 15 நாள் 20 நாள் வரை எடுக்கலாம் .அப்படி 20 நாள் கழித்து அந்த உயில்  என் கையில் வந்து சேர்ந்தது. அதை பிரித்து படித்தவுடன் எனக்கு ஒரே அதிர்ச்சி. அவருடைய சொத்துக்கள் எல்லாவற்றையும் பட்டியலிட்டு யார் யாருக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதை குறிப்பிட்டு, அதை பாகம்  செய்யும் அந்த உரிமையை Administrator அட்மினிஸ்ட்ரேட்டர் உரிமையை என் பெயரில் எழுதி வைத்திருந்தார் !ஒரு பக்கம் அவர் என் மேல் கொண்டிருந்த நம்பிக்கை என்னை வியப்படைய வைத்தது. இவ்வளவுக்கும் அவரை நான் நேரில் ஒருபோதும்  சந்தித்தது இல்லை .வெறும் கடிதம் வாயிலாக தான் நாங்கள் பேசிக் கொள்வோம். அவருடைய மகள் பெயரும் என்னுடைய மகள் பெயரும் ஒன்றுதான்.  ஆக. ஒரு பக்கம் எனக்கு மகிழ்ச்சியாக  இருந்தாலும், இன்னொரு புறம் நான் அவ்வாறாக உயில் அட்மினிஸ்ட்ரேட்டராக ஆக முடியாது . வங்கியில் அப்படி ஏற்பாடு கிடையாது.ஆனால் வங்கி  அந்தப் பொறுப்பை ஏற்று administrator ஆக முடியும். ஆதலால், நான் உடனே அவருக்கு ஒரு பதில்  போட்டேன். உங்கள் கடிதம் கிடைத்தது, உங்களுக்கு ஒன்றும் ஆகாது, நான்  இறைவனை பிரார்த்திக்கிறேன். நீங்கள் நலமுடன் திரும்பி வருவீர்கள் என்று உறுதி அளித்துவிட்டு, உங்கள் உயிலை நான் செயல்படுத்த எனக்கு வங்கி அனுமதி கிடையாது .ஆதலால் அதை  சென்னை தலைமை அலுவலகத்திற்கு  அனுப்பி எங்கள் வங்கி அட்மினிஸ்ட்ரேட்டர் ஆகும் படியாக நான் ஏற்பாடு செய்கிறேன். நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்று சொல்லி ஆறுதலோடு அந்த கடிதத்தை உடனே தபாலில் சேர்த்தேன். கடவுள் கிருபையால் அவருக்கு  ஒன்றும் ஆகவில்லை. அவர் உயிர் பிழைத்து பின்னர் 2007  வாக்கில்,கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு பின்னர்,பணி நிறைவு பெற்று  இந்தியா வந்தபோது என்னை சந்தித்தார் .அவருக்கு ஒரே சந்தோஷம். அப்போதுதான் முதன்முதலாக அவர் என்னை பார்க்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். என்னை பார்க்காமலேயே அவருடைய உயிலுக்கு என்னை administrator ஆக நியமித்தார் என்றால் அந்த அளவுக்கு வாடிக்கையாளர் சேவை நான் அந்த காலத்தில் நான் செய்திருக்கிறேன் என்பதை நினைக்கும் போது இப்போது இருக்கும் வங்கி  ஊழியர்களை நினைத்து வேதனைப்படுகிறேன். போய் நின்றால் நிமிர்ந்து கூட பார்க்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறார்கள். போதாததற்கு தமிழ் தெரியாத வட இந்தியர்கள் வேறு அதிகாரிகள் பதவியில் இருக்கிறார்கள். வாடிக்கையாளர் சேவையின் தரம் இப்போது அதள  பாதாளத்திற்கு சென்றுவிட்டது என்பதை மறுக்க முடியாது. அந்த நாட்கள் திரும்பி வருமா என்ற ஏக்கத்துடன் இதை முடிக்கிறேன்.

Tuesday 18 April 2023

மணவாழ்க்கையா இல்லை பிணவாழ்க்கையா ?

                                                                      (Pic Credit -Google )
 

இயற்கையின் படைப்பில் ஆணென்றும் பெண்ணென்றும் இரண்டு தனித்தனி படைப்புகள் ஏன் இருக்கின்றன ? ஒரே படைப்பாக இருந்து, பிள்ளைகள் பெறும்படியாக இருந்திருக்கலாமே! ஏன் அவ்வாறு இல்லை? என்று நீங்கள் என்றாவது சிந்தித்தது உண்டா?

அவ்வாறு இருக்க சாத்தியமில்லை என்று சொல்ல முடியாது. இயற்கையில், சில தாவர இனங்களிளிலும், விலங்கினங்களிலும் parthenogenesis என்ற ஆண் பங்கு இல்லாத asexual இனப்பெருக்கம் நடக்கிறது.  அதேபோல் மனித இனத்திலும் இருந்திருக்கலாம் அல்லவா? ஏன் இல்லை? 

மனித இனத்திலும், விலங்குகள் இனத்திலும் மாத்திரம் ஏன் ஆண் பெண் என்று இரு பாலினங்கள் உள்ளன?

 விலங்கினங்களில் மிகவும் முன்னேறியதாய் காணப்படுவது மனித இனம். ஆக, மனித இனத்தின் வாழ்க்கை முறையை ஆய்ந்து பார்த்தால் ஏன் இரு பால் தனித்தனியே  தேவைப்படுகிறது என்பது புரியும்.

 எந்த இனமும் குட்டி போட்டு இனப்பெருக்கம் செய்ய இரண்டு தேவைகள் உள்ளன.ஒன்று ஒரு பாதுகாப்பான கூடு.இரண்டு குட்டி போட ஒரு பெண். பாதுகாப்பான கூட்டிற்கு ஒரு ஆண் தேவை. ஆக, ஆண் என்பவன் இடத்திற்கு பாதுகாவலன். முரட்டு பலம் கொண்டவன். பயம் இல்லாதவன். எதிரிகளிடம் இருந்து காப்பதற்கு திறன் பெற்றவன் . பெண், குட்டி போட்டு, அதற்கு பாலூட்டி, பேணி வளர்க்கக்கூடிய திறன் பெற்றவள். அன்பு காட்டுபவள், ஆதரிப்பவள். ஆணுடன் இசைந்து நடப்பவள். இவ்வாறாக ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபாடாக அமைந்த குணங்களை ஒன்றாக்கி ஒரு பாலாக உருவாக்க முடியாது என்பதால்தான் இயற்கையில் ஆண், பெண் என்று இரு தனித்தனி பால்களாக உள்ளன.

ஆக,ஆணும் பெண்ணும் இணைந்து  ஒரு குடும்பம் உருவாகிறது.ஆணே அதற்கு இயல்பான தலைவர். இதைப் பெண் ஒத்துக் கொண்டு குடும்பம் நடத்தினால் எல்லாம் சுமுகமாக நடக்கும்.இதை பெண் ஒத்துக் கொள்ளாமல், தலைமைப் பொறுப்பை தான் ஏற்க நினைத்தால், குடும்ப வாழ்க்கையில் குழப்பம் ஏற்படலாம்.ஒரு கப்பலுக்கு இரண்டு மாலுமிகள் இருக்க முடியாது. இருந்தால் திசை தப்பி விடும்!அது குடும்பம் என்ற கப்பலுக்கும் ரொம்பவே பொருந்தும்.

            ஒருவேளை மனைவி மாலுமி ஆக விரும்பி, கணவன் அதை ஒத்துக் கொண்டால் என்ன ஆகும்? குடும்பத்தில் அமைதி நிலவும். ஆனால், குடும்பம் சரியான திசையில் பயணிக்காது! ஏனென்றால் பெண்மையின் குணங்கள் பிள்ளைகளிடம்  மேலோங்கி நிற்கும். அது குடும்பத்தை/தலைமுறையை  முன்னெடுத்து செல்ல முடியாது.

 அப்படியான ஒரு குடும்பத்திலிருந்து வந்த ஒரு பெண், ஆளும் இயல்புடன் இருக்கும் ஒரு ஆணை மணமுடித்தால் என்ன ஆகும்? அவர்கள் மண வாழ்க்கை எப்படி இருக்கும்? இரண்டு பேரும் தலைமைக்கு போட்டி போட நினைத்தால், குடும்பம் எப்படி இருக்கும்? இவர்களின் குழந்தைகள் எந்த விதமான பாதிப்புக்கு உள்ளாவார்கள்? எந்தவிதமான  விழுமங்களை கடைப்பிடிப்பார்கள்? 

இதோ அப்படி ஒரு ஜோடியின் ஒரு உண்மைக் கதை!

கார்த்திக் ஷெரின் ஜோடி!

 கார்த்திக் எம்பிஏ முடித்தவன்.தலைமுறை தலைமுறையாக  ஆண்கள் மட்டும் ஆளும் ஒரு குடும்பத்தில் இருந்து வந்தவன். அவன் குடும்பத்தில் அப்பாவின் சொல் தான் கடைசி சொல். ஒரு விஷயத்தைப் பற்றி அப்பா என்ன நினைக்கிறார்,என்பதே அதன் முடிவை நிர்ணயிக்கும் . வீட்டிலுள்ள எல்லோருடைய தலைவிதியையும் இறுதியில் நிர்ணயிப்பது அப்பாதான். அவர்கள் குடும்பத்தில் அப்பா என்பது ஒரு சர்வ அதிகாரமிக்க பதவி.

ஷெரின் ஒரு குமரி மாவட்ட குமரி. குணத்தில் கிட்டத்தட்ட மலையாளி போல . ஷெரினின் குடும்பத்தில் அவளுடைய தாயார் வைத்ததுதான் சட்டம்.கார்த்திக் குடும்பத்தில் அப்பா எப்படியோ ,அதே இடத்தில் இங்கு அம்மா !தகப்பனார் என்பவர் சும்மா ஒரு 'டம்மி பீஸ் '. ஷெரினுக்கு மூன்று சகோதரர்கள் உண்டு. அவர்கள் எல்லோரும் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு அன்பான வேலைக்காரர்கள்! ஷெரினுடைய வாழ்க்கையில், அவளுடைய அம்மா பிள்ளைகளுக்குத் தெரிந்து,அப்பாவிற்கு ஒருபோதும் கட்டு பட்டதில்லை. அப்பா ஏதாவது செய்ய சொன்னாலும், அதையும் அம்மா வேண்டாம் என்று சொன்னால் யாரும் மீறி விடலாம்! ஆக,அங்கு ஒரு விதத்தில் அல்லி ஆட்சி! ஷெரினும் ஒரு குட்டி அல்லியாகவே வளர்ந்தாள்.

 கார்த்திக் ஒரு ஆள்பவன். ஷெரின் ஒரு அல்லி. இருவர் இணைந்த மண வாழ்வு எப்படி இருக்கும்?

                                             தேனிலவு முடியும் வரை எப்படியோ எல்லாம் ஒத்துப் போய் விட்டது. தேனிலவு நேரத்திலும், ஷெரின் தான் அதிக முடிவுகளை எடுத்துக் கொண்டிருந்தாள். கார்த்திக் இருவரும் தனியாக நேரத்தை செலவழிக்க வேண்டும் என்று திட்டமிட்டால்,ஷெரினோ போகுமிடமெல்லாம், அங்கிருக்கும் சித்தி வீட்டிற்கும்,அத்தை வீட்டிற்கும் போவதிலே அதிக குறியாக இருந்தாள்.ஆனால், கார்த்திக் அவளுடைய ஆக்ரமிப்பை எல்லாம் அப்போது  அவ்வளவாக கண்டு கொள்ளவில்லை. அவனுள் இருந்த ஆண் அவ்வளவாக  இன்னும் வெளியே வரவில்லை.

                                        தேனிலவு முடிந்து நிஜவாழ்க்கையில் அமரும் போதுதான் இருவருக்கும் உள்ள ஆளும் ஆவிகள் மோத ஆரம்பித்தன. இரண்டு முன்பின் தெரியாத  ஆண்கள் திருமணம் முடித்தால், குடும்ப ஆளுமை  எப்படி இருக்கும்? அதுபோலத்தான், கார்த்திக்கும் ஷெரினும் ஒத்து போவதில் எப்போதும்  ஒரு உரசல் இருந்து கொண்டிருந்தது. எப்படியான உரசல் ?

                                     முதலில் அன்றாட வாழ்க்கை எடுத்துக்கொள்வோம். ஒருவர் சொல்ல, ஒருவர் கேட்க, என்பதுதான் பொதுவான நியதி. காலையில் கார்த்திக் வேலைக்குக் கிளம்பும்போது,' ஷெரின்,நான் கிளம்புறேன் 'என்பான் .ஷெரின் தரப்பில் இருந்து, ' சரிங்க, போயிட்டு வாங்க' என்ற பதிலை அவன் மனம்  எதிர்பார்க்கும். ஆனால், ஷெரினோ பக்கத்தில் நின்றாலும் பதில் ஒன்றும் சொல்ல மாட்டாள்! அவளுக்கு கார்த்திக் பேசுவது காதில் விழவே விழாது! அவளாக கார்த்திக்கிடம் ஏதாவது கேள்வி கேட்டால், அதற்கான கார்த்திக்கின் பதிலை  மாத்திரம் கேட்டுக் கொள்வாள்! இப்போது இந்த சூழ்நிலையில், அவளே வந்து,'என்ன,ஆபீஸ் போறீங்களா?' என்று கேட்டு, அதற்கு கார்த்திக் பதில் சொன்னால், அது மட்டும் கேட்கும்! சிலநேரம் இதற்காக கார்த்திக் இரண்டு மூன்று தடவை ஒரே விஷயத்தை சொல்வான். ஆனால் அது எதுவும் ஷெரின் காதில் விழாது.எப்படிங்க!

                                                               பின்னர் கார்த்திக் தண்ணீர் கேட்கிறார் என்று வைத்துக்கொள்வோம். ஷெரின் ஒரு டம்ளரை தூக்கிக் கொண்டு வருவாள்.  கார்த்திக் தண்ணீர் கொண்டு வருகிறாள் என்று,குடிக்க தயாராவான். ஷெரின் பக்கத்தில் வந்து, டம்ளரை கார்த்திக் கையில் கொடுத்துவிட்டு,' தண்ணீர் குடத்தில் இருக்கு' என்று சொல்லிவிட்டுப் போய்விடுவாள்!தண்ணீர் எதிர்பார்த்த கார்த்திக், சிறிதுநேரம் குழம்பிப் போய் விடுவான்! இது ஆணைக்கு, பதில் ஆணை! ஆங்கிலத்தில் இதை counter instruction என்பார்கள்.இப்படி ஒவ்வொன்றிலும் ஒரு குழப்பம் ! எப்போதும் இரண்டு ஆண் ஆவிகள் மோதுவது போல் ஒரு உணர்வு.

                                                         கார்த்திக் தன் அம்மாவை நினைத்து பார்த்தான். அப்பா, தண்ணீர் என்று சொல்வதற்கு முன்னாலே, அம்மாவுக்கு ஒரு உணர்வு தட்டும். ஒரு டம்ளரில் கொண்டு வந்து கையில் கொடுத்து விட்டு போவார்கள்.இதைத்தான் வள்ளுவர் குறிப்பறிதல் என்று சொன்னார். இந்த அளவு இல்லாவிட்டாலும் வாய் திறந்து கேட்டதையாவது சரியாக செய்ய வேண்டும் அல்லவா? ஆனால், ஷெரினோ டீ கேட்டால் கூட, அதை முன்னால் வைத்துவிட்டு, ஒன்றும் சொல்லாமல் போய்விடுவாள்! செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருக்கும் கார்த்திக் ஒரு பத்து நிமிடம் காத்திருந்து பார்த்துவிட்டு ,' டீ என்ன ஆச்சு?' என்று கேட்டால்,' முன்னால பாருங்க 'என்று பதில் வரும். அதற்குள் டீ ஆறிப் போயிருக்கும்! டீயை கையில் கொடுப்பதற்கும் முன்னால் வைத்து விட்டு போவதற்கும் ஒரு பெரிய வேறுபாடு உள்ளது. டீக்கடையில் கூட அவன் கொண்டு வந்து நம் கையில் கொடுத்து விட்டு போவான் . அதில் நம் மேல் அவன் கொண்ட ஒரு அக்கறை  தெரியும்.

                                           சில நேரம் கார்த்திக்,'ஷெரின், இதை கொஞ்சம் பிடி' என்று ஒரு டம்ளரை நீட்ட, ஷெரின் அதைப் பிடிக்கவே மாட்டாள்! அவள் பாட்டுக்கு போய்க்கொண்டே இருப்பாள். சிறிது நேரம் கழித்து கார்த்திக், கையை நீட்டிக் கொண்டிருக்கும் ஒரு முட்டாள் போல் உணர்வார். பிறகு அவரே அதைக் கொண்டுபோய் எங்கு வைக்க வேண்டுமோ அங்கு வைப்பார்!

                                                அன்புதான் திருமண வாழ்வின் அடித்தளம். மனைவி கணவனை நேசித்தால், அவன் குணம் என்ன, அவன் தேவைகள் என்ன, அவன் எந்த நேரத்தில் என்ன செய்வான், என்பதெல்லாம் புரிந்து கொள்வாள். அதற்கு தகுந்தால் போல நடந்து கொள்வாள்.  இயேசு ஒரு முறை அவர் சீடர்களிடம் சொன்னார்,'நீங்கள் என்னை நேசித்தால், என்னுடைய கட்டளைகளை நிறைவேற்றுவீர்கள் '. ஆக, ஒருவர் சொல்வதை செய்வது தான்  அவர் மேல் நாம் காட்டும் அன்பின் அடையாளம்.

                                                                 ஆனால்,ஷெரினை பொறுத்தவரையில்,அன்பு என்றால்,பெயர் கூட மா என்று சேர்த்து சொல்வது தான்.' என்ன கார்த்தி மா'என்று சொல்லிவிட்டு, சொல்வது எதுவும் செய்யாமல் விட்டு விடுவாள்! அவர்கள் குடும்பத்தை பொறுத்த வரையில் அது தான் அன்பு காட்டுவதாம்!அ தில் கூட 'மா'தான் ,' பா' இல்லை!

                                                                   காலப்போக்கில், ஷெரின் எல்லா விடயங்களிலும் தனியாகத்தான் முடிவெடுக்க விரும்புகிறாள் என்பது தெளிவாகத் தெரிய ஆரம்பித்தது.ஒரு சாலையை கடப்பதில் கூட, கையைப் பிடித்து அழைத்து வந்தால், அவள் மறுத்துவிடுவாள். கார்த்திக் முதலில் கடந்து எதிர் பக்கம் போய் நின்று விடுவான். பின்னர் ஷெரின் தனியாக வருவாள்! இது பல இடங்களில் குழப்பத்தை உண்டாக்கியது. கார்த்திக் முன்னாலே போய் காத்திருக்க வேண்டும்! ஷெரின் பயந்தவள். ஆதலால் எல்லாப் போக்குவரத்தும் கடந்த பின் தான் சாலையை கடந்து வருவாள் . அதுவரை கார்த்திக் அவளுக்காக அங்கு பொறுமையாக காத்திருந்து  நிற்கவேண்டும். இந்த தனியாக முடிவு எடுக்கும் பாங்கு,ஷெரினிடம் மிகவும் பலமாக இருந்தது.  ஆதலால் கார்த்திக்கின் விருப்பங்கள், எதிர்பார்ப்புகள் அவள் முடிவை எந்த விதத்திலும் பாதிக்காமல் இருந்தது. எடுத்துக்காட்டாக, கார்த்திக் காலையில், டீ தான் குடிப்பான் என்று எடுத்துக் கொண்டால், அவள், அவள் விருப்பத்திற்கு காப்பி போடுவாள். பின்னர் கார்த்திக், நான் டீ தான் குடிப்பேன், என்று சொன்னவுடன் போய்விடுவாள். மறுநாளும் கார்த்திக் அதே போல சொல்ல வேண்டும். இல்லையென்றால் மறுநாளும் காப்பி தான் கிடைக்கும். இப்படியாக, வருடத்தில் 365 நாளும், தினமும் கார்த்திக் சொல்ல வேண்டும்! இதைப் பற்றி கேட்டால், ஷெரினுக்கு கோபம் தான் வரும். ரொம்ப கேட்டால் கண் கலங்கும் . கார்த்திக், இப்படி ஒருவரால் எப்படி செய்ய முடியும், என்று அடிக்கடி யோசிப்பதுண்டு . அவனுடைய அலுவலகத்தில் அவனுக்கு உதவி செய்ய ஆண்டனி என்ற ஒருத்தர் இருந்தார் . ஒருவாரம் பழக்கத்தில், கார்த்திக் காலையில் எத்தனை மணிக்கு டீ கேட்பார், எவ்வளவு சீனி போட வேண்டும்,எந்த நிறத்தில் டீ  இருக்க வேண்டும், எந்தக் கோப்பையில் கொடுக்க வேண்டும், எல்லாம் அறிந்து வைத்துக்  கொண்டார். தினமும் அவரிடம் கேட்க வேண்டாம். சரியாக காலை 11 மணிக்கு ஒரு 'மீடியம் டீ ', கார்த்திக்கு பிடித்த நிறத்தில்,பிடித்த கோப்பையில் வைத்து, சார் டீ ரெடி என்று சொல்லி விட்டு போவார்! பேசாமல் அந்த ஆண்டனியை கல்யாணம் செய்து இருக்கலாமோ என்று அடிக்கடி கார்த்திக்குக்கு தோன்றும்!

                                                                 ஒரு ஆணை, பெண் சிறுசிறு செயல்களால், மகிழ்ச்சி படுத்த முடியும், அதேபோல பெருமளவில் சங்கட படுத்தவும் முடியும். எடுத்துக்காட்டாக, என்னவர்  மாதிரி வருமா? என்று மனைவி பொது வெளியில் சொல்லிவிட்டால் போதும். ஆணுக்கு தான் ஆண் என்ற ஒரு உச்ச உணர்வு வந்துவிடும்! ஒரு ஆணை ஆணாக உணரச் செய்வது பெண்தான். மற்ற ஆண்கள் அல்ல!ஷெரின் கார்த்திக்கை, ஒரு ஆணாக ஒருபோதும் உணர செய்ததே  இல்லை. மாறாக கார்த்திக்கை பலமுறை மட்டம் தட்டியிருக்கிறாள் . அவன் உணர்வுகளை காயபடுத்தி இருக்கிறாள். பல முறை அவனை  uncomfortable ஒரு மாதிரியாக உணரச் செய்திருக்கிறாள். என்ன செய்தால் கார்த்திக்குக்கு பிடிக்காதோ, அதை விரும்பி செய்வாள் ஷெரின். வெளியே சொல்லக் கூடாத சில தகவல்களை யாரிடம் சொல்ல கூடாது என்று கார்த்திக் நினைத்தானோ, அவர்களிடமே உடனே உளறிக்கொட்டி விடுவாள். கார்த்திக்குக்கு பக்கென்று இருக்கும். கார்த்திக் அதைப்பற்றி ஷெரினிடம்  சொன்னால், அதைப்பற்றி ஒன்றும் கவலைப்பட மாட்டாள்!ஒரு sorry கூட சொல்லமாட்டாள்.இதில் கடுப்பேற்றும் விடயம் என்னவென்றால் , பிடிக்காத காரியத்தை செய்து விட்டு , அதை பெருமையாக  சொல்வாள். அதாவது, நீ என்ன சொல்லுவது நான் என்ன கேட்பது என்பது மாதிரி இருக்கும்.சரி, என்ன செய்வது இவள் ஓட்டை வாய் ,இப்படித்தான் எல்லாம் உளறி விடுவாள் என்று சமாதானப்பட முடியாது ,ஏனென்றால் அவள் பிறந்த வீட்டின்  விடயங்கள்  ஒன்றையும் 1யாரிடம் கசிய விடமாட்டாள்!இது எப்படி இருக்கு !

                                                                      மொத்தத்தில், ஆண் பெண் இருவரும் ஒவ்வொரு தண்டவாளம் என்றால், இங்கு ஷெரின் என்ற தண்டவாளம் தனிப் பாதையில் வேறு திசை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது. எல்லாவற்றிலும் ஷெரினுக்கு தனி திட்டம்! எடுத்துக்காட்டாக இருவரும் சேர்ந்து ஒரு ஊருக்கு பயணம் செல்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். கார்த்திக் சொல்லும் சாமான்களை ஷெரின் பெட்டியில் வைக்க மாட்டாள். மாறாக அந்த ஊரில் இருக்கும் அவளுடைய உறவினர்களுக்கு /நண்பர்களுக்கு என்ன எடுத்துச் செல்ல வேண்டும் என்பதை மறக்காமல் எடுத்து வைப்பாள்!! இதனால் கார்த்திக்கின் திட்டங்கள் எல்லாம் எப்படியாவது குழம்பி விடும். அல்லது குழப்பப்பட்டு விடும்! இந்த முறை எப்படி குழம்பிவிடுமோ என்று கார்த்திக்குக்கு எப்போதும் மனதில் ஒரு படபடப்பு இருந்து  கொண்டே இருக்கும்.

                                                      எல்லாவற்றிலும் ஷெரின் தலையிடுவதால், இது எந்த திசையில் நகருகிறது என்று கார்த்திக்கு பலமுறை தெரியாமலேயே போய்விடும். அவனுடைய முடிவுகள் ஒன்றையும் அவனால் செயல்படுத்த முடியாது. எடுத்துக்காட்டாக, பக்கத்து வீட்டுக்காரர் 20000 ரூபாய்  கார்த்திக்கிடம் கடன் கேட்கிறார் என்று வைத்துக் கொள்வோம். கார்த்திக் இன்னும் சம்பளம் வரவில்லை என்று சொல்லி கடன் கொடுப்பதை மறுத்து விடுகிறார்.ஆனால் கார்த்திக்கு தெரியாமல் ஷெரின் பக்கத்து வீட்டுக்காரரிடம் சம்பளம் வந்ததை பேச்சுவாக்கில் சொல்லி விடுகிறாள்! இப்போது என்ன செய்வது🤔

                                                இப்படி எல்லாம் இருந்தாலும்,சில குடும்பங்களில் மனைவியின் அன்பு இந்தப் பிரச்சினைகள் எல்லாம் ஒன்று இல்லாமல் ஆக்கிவிடும்.ஆனால் ,இங்கோ  ஷெரினுக்கு கணவன் மேல் எந்தவிதமான அன்பும் கிடையாது. எந்த விதமான பரிவும் கிடையாது.  அதனால் கணவனுக்காக செய்யும் ஒவ்வொரு செயலும், ஷெரினுக்கு ஒரு பெரும் பாரமாக தெரியும். ஊரார்களுக்கு மிகவும் அன்புடன், கனிவுடன்  எந்த உதவியும் செய்வாள்  ஷெரின்! கார்த்திக்கை பொருத்தவரையில்  உணவு உண்ணும் முன் முதலில் ஒரு டம்ளர் தண்ணீர் கொடுக்க வேண்டும். அப்படித்தான் சிறுபிள்ளையிலிருந்து அவன் பழகி இருக்கிறான். ஆனால் ஷெரின் அந்த தண்ணீரை கொடுக்கவே மாட்டாள். கார்த்திக் தினமும் தண்ணீர் கேட்க வேண்டும். தண்ணீர் குடிக்காமல் இரும வேண்டும். அதன் பின்னரும் மெதுவாகத்தான் தண்ணீரை கொடுப்பாள்  ஷெரின். 40 வருடங்கள் போராடியும் இன்னும் அது மாறவில்லை. சரி இவளிடம் போராடி தண்ணீர் பெறுவதை விட, நாமே எடுத்து வைத்துவிட்டு பிரச்சனையை தீர்த்து விடலாம் என்று கார்த்திக் முடிவெடுத்தான். தண்ணீரை தேடி போனால், ஷெரின் அது எங்கு வைத்திருக்கிறாள் என்றே கண்டுபிடிக்க முடியவில்லை! அவ்வளவு ஒழுங்கற்ற முறையில் வீட்டை வைத்திருந்தாள் ஷெரின்!! ஆக அவளும் தர மாட்டாள், நம்மையும் எடுக்க விடமாட்டாள்! என்ன செய்வது🤔 

                                                                        இது எல்லாவற்றிற்கும் மேலாக அவளிடம் ஒரு கெட்ட குணம்  இருந்தது . அது என்னவென்றால் குடும்பத்தை எப்படி நடத்துவது என்பதில் கணவன்  கார்த்திக்கு ஒரு பங்குமே கொடுக்க மாட்டாள் . ஏதாவது கார்த்திக் குழந்தைகளிடம் ஒன்று சொன்னால் அதை எப்படியாவது இல்லாமல் ஆக்கி விடுவாள். இதனால் கார்த்திக்கின்  வழிகாட்டுதல்  குழந்தைகள் வளர்ப்பில் சிறிது  கூட இல்லாமல் போயிற்று . குழந்தை வளர்ப்பில் அப்பாவின் பங்கு ,ஆண் குழந்தையானாலும், பெண் குழந்தை ஆனாலும் மிகவும் இன்றியமையாதது என்பதை அவள் உணரவில்லை. ஷெரின் தன்னுடைய சுயநலம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு அந்த குடும்பத்தை ,அதன் உள் உறவுகளை நாசம் செய்து விட்டாள் என்றே சொல்லலாம் .ஒரு  குடும்பம் என்றால் ஒருவர் தேவையை மற்றவர் கவனிப்பதுதான் முக்கியம் .அன்பு ஒன்றே அதை பின்னின்று  இயக்கும் இயந்திரம் .ஒருவரால் ஒரு காரியம் முடியவில்லை ,அல்லது மறந்து விடுகிறது என்றால் குடும்பத்தில் இருக்கும் மற்றவர்கள் அதை நினைவு வைத்து அவர்களுக்கு அதை செய்து விடுவது தான் அன்பு. ஷெரின் அப்படி நினைக்கவில்லை .ஒருவருக்கு எதுவும் வேண்டுமென்றால் அவர்களே  செய்து கொள்ள வேண்டும். மற்றவர்களை எதிர்பார்க்கக் கூடாது. தனித்து இயங்க வேண்டும் என்று ஒரு தவறான கோட்பாட்டை சொல்லிக் கொடுத்து ,அதில் பலமாக வளர வைத்து விட்டாள் .அதனால் ஒருவரை ஒருவர் சார்ந்து  ஜோடியாக வாழும் நிலைமை தேவையே இல்லை என்ற எண்ணத்தை வளர்த்து விட்டாள் .

 மொத்தத்தில் நல்ல ஒரு மண வாழ்க்கைக்கு தேவையானது என்னென்ன என்று பார்த்தால்:

  •  கணவன், மனைவி இருவருக்கும் இடையில் ஒரு நல்ல இணக்கம் .அதாவது இதை எளிதாக சொல்ல வேண்டுமென்றால் இருவரும் ஒரே ஆவியில் ஐக்கியமாக செயல்பட வேண்டும் .
  • இரண்டாவதாக இருவரும் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்த வேண்டும். அன்பு தான் மண வாழ்க்கையை ஆள வேண்டும். ஆணவம் ஒருநாளும் ஆள விடக்கூடாது.
  • கணவன் மனைவியை விட வேறு யாருக்கும் அதிகம் முன்னுரிமை கொடுக்கக் கூடாது .அது போல மனைவி கணவனுக்கு தான் முதல் முக்கியத்துவம் கொடுத்து ,அவர் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். ஒரு குடும்பத்தின் தலைவராக அவர் எடுக்கும் முடிவுகளை மனதார ஆதரிக்க வேண்டும் செயல்படுத்த வேண்டும்.
  •  முக்கிய முடிவுகளை இருவரும் கலந்து பேச வேண்டும் .ஆனால் இறுதி முடிவு குடும்பத்தின் தலைவரான கணவருக்கே உண்டு.
  • கணவன் மனைவி அவரவருக்கு அவர்கள் விருப்பங்கள் வேறுபாடாக இருக்கலாம் .தப்பில்லை .ஆனால் அது ஒரு நாளும் மோத கூடாது. கணவனுக்கு பிடிப்பது மனைவி எப்போதும் எதிர்க்கக் கூடாது .அதை அவளுக்கு பிடிக்காவிட்டாலும் கணவனுக்காக  அன்பின் அடிப்படையில் செயல்படுத்த வேண்டும்.
  • மணமான பின் கணவனோ மனைவியோ தங்கள் பிறந்த வீட்டிற்கு எப்போதும் அதிகம் முக்கியத்துவம் கொடுத்து அதையே பற்றி பேசிக்கொண்டு அவர்களுடன் உள்ள உறவை முன்பு போல் பலமாக வைத்துக் கொண்டு இருப்பது மண வாழ்க்கைக்கு நல்லதல்ல. ஷெரின் காலையில் எழும்பியதிலிருந்து அண்ணன்,அக்கா , தங்கை என்று எல்லோருக்கும் தொலைபேசி அழைப்பு கொடுப்பாள் . எல்லோரிடமும் எல்லா கதையும் ஆர்வமுடன் கேட்பாள் . ஆனால், வீட்டில் இருக்கும் யாரிடமும் எதையும் கேட்பதில்லை.அவள் நினைவெல்லாம் அவர்கள் தான்.இன்னும் பழைய கதைகளையே நினைத்து பேசிக் கொண்டிருப்பாள் . கனவில் ஏதாவது பயந்தால் கூட ,'அக்கா !தம்பி!என்னை காப்பாற்று !' என்று தான் அலறுவார் !  இப்படியான பழக்கம் நல்ல மண வாழ்க்கைக்கு எப்போதும் தடையாகத் தான் அமையும் என்பதை மறக்கக்கூடாது . மணமான பின் தன்னுடைய சொந்த குடும்பத்திற்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை இருவரும் ஒருநாளும் மறக்கக்கூடாது.
  • மண  வாழ்க்கையில்  ஒரு நாளும் ஒருவர் மேல் ஒருவருக்கு வெறுப்போ ,மன  கசப்போ வந்து விடவே கூடாது .அது  வாழ்க்கையையே மெல்ல  அழித்துவிடும்.

 மொத்தத்தில் நம் வாழ்க்கை , மணவாழ்க்கையா இல்லை பிணவாழ்க்கையா என்பதை தீர்மானிப்பது நாம் தான் என்பதை ஒரு நாளும் மறக்கக்கூடாது.


.



Sunday 1 August 2021

சார்பட்டா பரம்பரை --இறுதியில் குத்து வாங்கியது யார் ?

 


சமீபத்தில் அமேசான் ப்ரைம் களத்தில் வெளியிடப்பட்ட தமிழ் படம் என்று சொல்லப்படும் சார்பட்டா பரம்பரை என்ற,  படத்தை பார்த்தேன். இயக்குனர்  பா. ரஞ்சித்தின் இந்த படத்தை பார்த்துவிட்டு ஏற்கனவே பலர்  விமர்சனம் பலவிதமாக  செய்திருக்கிறார்கள். விகடன் குழு 45 மதிப்பெண் தான்  கொடுத்திருக்கிறது. அந்த மதிப்பெண்ணை பொதுவாக மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை .நானும் அதை  ஏற்றுக்கொள்ளவில்லை. 

மற்ற விமர்சகர்கள்  சொல்லாத சில  புதிய புள்ளிகளை தான் நான் இங்கு சொல்ல விழைகிறேன். படத்தின் களம் 1970 களின் வடசென்னையாகும். அங்கு முகமது அலி போன்ற  உலகப் பெயர் பெற்ற குத்துச்சண்டை வீரர் அளவுக்கு குத்துச்சண்டை வீரர்கள் இருந்தார்களாம். அவர்கள் 2,3 பரம்பரையாம் . ஒன்று சார்ப்பட்டா பரம்பரையாம் . இன்னொன்று,இடியாப்ப பரம்பரையாம் . இவர்களுக்குள் போட்டி நடக்குமாம்.ஊரே திரண்டு வந்து பார்க்குமாம். இத்யாதி இத்யாதி...

                                         இந்த கதை எப்படி பா. ரஞ்சித்துக்கு கிடைத்தது என்று தெரியவில்லை. கூகுள் தேடுதலில் பார்த்தால் சார்பட்டா என்ற சொல்லே உலகில் எங்கும் கிடையாது என்பதுபோல் பதில் வருகிறது. அந்த சொல் தேடுதலில், இந்தப் படத்தை தவிர அந்த சொல்  வேறு எங்குமே காண வரவில்லை.  ஆக, சார்பட்டா பரம்பரை என்று ஒரு பரம்பரை பெரிய அளவில் இருந்ததாக தெரியவில்லை.1970 வாக்கில் எனக்கு தெரிந்து, சென்னையில் குத்துச்சண்டை மைதானம்  boxing ring சென்னை கிறிஸ்தவக் கல்லூரி ஒன்றில் மட்டும்  தான் இருந்தது. அங்கு மிகவும் பணக்கார,உயர் வர்க்க  மாணவர்கள் மாத்திரம் பங்கெடுக்கும் ஒரு  விளையாட்டாக அது இருந்தது. அதைத் தவிர சென்னையில் எங்கும் குத்துச்சண்டை நடந்தததாக சரித்திரப் பதிவுகள் எதுவும் கிடையாது. எனினும், 1976 ல் நெருக்கடி நிலை  முடிந்தபின் பொது இடங்களில் குத்துச்சண்டை போட்டி நடத்தக்கூடாது என்ற அரசு ஆணை வந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆக, குத்துச்சண்டை போட்டிகள் பொதுவிடங்களில் அதன் முன்னர்  நடந்ததாக தெரிகிறது .

                                              இனி இந்த படத்தைப் பற்றி பேசலாம். அந்த காலத்தில், பட இயக்குனர்கள் படத்தின் காலத்தை  முதலில் நமக்கு ஏதோ ஒரு வகையில் அறிமுகம் செய்து வைப்பார்கள். அந்த அறிமுகத்தின் பின், நாம் அந்த காலகட்டத்துக்குள் எளிதாக நுழைந்து ஒன்றிவிடுவோம். இப்போதுள்ள இயக்குனர்களுக்கு அந்த மாதிரி திறமை எதுவும் இல்லை. பா. ரஞ்சித் இந்தப்படத்தின் காலப் பின்னணியை எங்கும் அறிமுகப்படுத்தவில்லை.சிறிது நேரத்தில்  நாமாக புரிந்து கொள்ள வேண்டும். புதியதாக நாம் அறியாத  ஒரு விளையாட்டு . அந்த குத்துச்சண்டை விதிகளை பற்றி யாராவது பேசுவதாக ஒரு காட்சியும் இல்லை. அப்படி இருந்திருந்தால் பார்வையாளர்களுக்கு இந்த குத்துச்சண்டை அடிப்படை பற்றி அறிய உதவியிருக்கும். அப்படி ஒரு காட்சி இல்லாததால், குத்துச்சண்டை பற்றி   ஒன்றும் தெரியாமல்  அவர்கள் பாட்டுக்கு குருட்டாம் போக்கில் ரசிகர்கள் பார்க்க வேண்டியது தான். ஆர்யா, ரங்கன் வாத்தியாரின் ரசிகன் என்பதையும் அவருடைய ஒவ்வொரு அசைவையும் மனதில் வைத்து ஆராதிக்கும் ஒருவன் என்பதையும் முதலில் தெளிவு படுத்தவில்லை. இயக்கத்தில் பல குழப்பங்கள் உள்ளது. பல காட்சிகள் துண்டு துண்டாக, ஒரு தொடர்பில்லாமல் ஒட்டப்பட்டது போல் உள்ளது. ஆர்யா எதற்காக அவ்வளவு குடிக்கிறார், பின்னர் தாயை போய் ஏன் அடிக்கப் போகிறார்,பின்னர் மன்னிப்பு கேட்கிறார்  என்பதெல்லாம் ஒரு தெளிவே  இல்லை. 

ஒரு கட்டத்தில் குழப்பம் அதிகமாகும்போது, படத்தை பார்க்காமல் அதோடு நான் நிறுத்திவிட்டேன்.முழு படத்தையும் பார்க்க என்னால் முடியவில்லை. பின்னணி இசையமைப்பு கொஞ்சம் கூடகாட்சிகளுக்கு  பொருத்தமாக இல்லை. நடிப்பவர்கள் ஒருவரும் தமிழர் சாயலில் இல்லை, ரங்கன் வாத்தியாரை தவிர. வேம்புலி மூக்கு ஏதோ வேறு ஒரு மாநிலம் போல் தோன்றுகிறது. இன்னொரு பெரும் பிழை,தெலுங்கு  நாயக்கர்களை,தமிழ்  தலித்துகளாக காட்டுவது. முதலிரவில் எந்த தலித் பெண்ணும் இப்படி கேவலமாக ஆட மாட்டார்.

 மொத்தத்தில், இந்த படத்திற்கு,விகடன் கொடுத்த 45 அதிகம் . 25/100 கொடுக்கலாம் என்பது என் கருத்து. சங்கராபரணம், பாகுபலி, கபாலி  போன்ற படங்கள் வெற்றியடைய முக்கிய காரணம், அதை சுற்றி ஊடகங்கள் போட்ட கூச்சல் தான்! அதேபோல பெரும் கூச்சல் போட்டு, சார்ப்பட்டா பரம்பரையும் வெற்றிப்படமாக காட்டிவிட்டார்கள்! ஆனால் உண்மை என்னவென்றால்,இறுதியில் குத்து வாங்கியது யார் என்றால்  படம் பார்த்த ரசிகர்கள் தாம் என்று ஐயமின்றி கூறலாம் ! அதுதான் எனக்கு மிஞ்சியது!

Tuesday 20 July 2021

தமிழ் திரைப்படம் எடுக்க தகுந்த நாவல்/புதினம் 'ராயனின் கதறல் '--விமர்சனம்

    ராயனின் கதறல்      


                                

                                      சமீபத்தில் ஆங்கிலத்தில் 'ராயனின் கதறல்'என்ற ஒரு ஆங்கில சுயசரிதை புதினத்தை வாசித்தேன்.மிகவும் சுவையாகவும் விறுவிறுப்பாகவும் எழுதப்பட்டிருக்கிறது. கதைக்களம் தமிழ் நாடு .காலம் ,1920 ஆங்கிலேயர் காலத்திலிருந்து ஆரம்பிக்கிறது . கதையின் நாயகன் ,ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து உதித்த கிளர்ச்சியாளன் .உரிமைக்காக போராடுபவன் .அடக்குமுறையை கண்டு அஞ்சாதவன் .மனதில் உறுதிகொண்டவன் .ஆனால் ,வயதில் மூத்த கிழவன் !குட்டி சாம்பான் அவன் பெயர் ! ஜமீன்தாரின் அதிகாரம் ஓங்கியிருந்த காலமது .குட்டி சாம்பான் செய்த ஒரு செயல் ,ஜமீந்தாரை கோபமூட்டுகிறது.அப்படி என்ன செயல் செய்தான்?அரண்மனை நகைகளை திருடிவிட்டானா?ஜமீன்தாரின் பெண்ணை கெடுத்துவிட்டானா?இல்லை,ஜமீன்தாரை அவமானமாய் பேசிவிட்டானா? என்னவென்று தெரியாது .அதை ஒன்றும் சொல்லாமல் வயதான குட்டி சாம்பானை ஒரு மரத்தில் கட்டிவைத்து கதற கதற அடிக்கிறார்கள் ஜமீன்தாரின் ஆட்கள் !

                                 அடி தாங்க முடியாமல் மயங்கி விழுந்த குட்டி சாம்பானை,பட்ட பலமான அடி முற்றிலும் மாற்றிவிடுகிறது .அவனுக்கு மட்டும் தான் தெரியும் ஏன் ஜமீந்தார் அவ்வளவு கோபப்பட்டார் என்று.ஏன் ?

                 குட்டி சாம்பான் குடிசை ,ஜமீன்தார் அரண்மனை தெருவுக்கு அடுத்த தெருவில் இருந்தது. அந்தப் பகுதியில் குட்டி சாம்பான் சிறியதாய் ஒரு வீடு கட்ட, ஒரு செங்கல் சூளை அமைத்திருந்தான் .அந்தச் சூளையிலிருந்து எழும்பிய புகை,அனுமதி இல்லாமல்,ஜமீன்தார் அரண்மனைக்குள் சென்றுவிட்டது! அதற்காகத்தான் இந்த தண்டனை!

                       அடியில் துவண்டாலும் ,மனதில் கொஞ்சம் கூட சாம்பான் துவள வில்லை.மாறாக விழுந்த அடிகள் அவன் மனதில் ஒரு புது முடிவு எடுக்க தெம்பு கொடுத்தது.'தவறே செய்யாத தனக்கு தண்டனை ஏன் வந்தது? தன்னுடைய தாழ்ந்த சாதி தானே இதற்கு காரணம் ? சாதியை மாற்றமுடியாது, ஆனால் சமுதாய நிலையை மாற்ற முடியும். ஆம், நான் ஒரு விவசாயக் கூலி, அதனால் தானே அடிக்கிறார்கள்.ஆனால் என் மகன் விவசாயக் கூலியாக இருக்கவிட மாட்டேன். அவனை நல்ல படிக்க வைத்து, சர்க்கார் உத்தியோகத்தில் அமர வைப்பேன் . என்னை அடித்தவர்கள் எல்லாம் என் மகன் முன் கை கட்டி நிற்பார்கள். இந்த,தீண்டத்தகாத என் தலைமுறை,எனக்கு பிறகு ஒரு எஜமான தலைமுறையாக மாறும். இது சத்தியம்',என்று மனதுக்குள் ஒரு முடிவெடுத்தார்.

                      அதன் பின்னர் குட்டி சாம்பான் எப்படி ஒரு புதிய எஜமான தலைமுறையை உருவாக்குகிறார் என்பதுதான் கதை. வழியில் எவ்வளவோ எதிர்ப்புகள்.எவ்வளவோ தடைக்கற்கள். எல்லாவற்றையும் தாண்டி தாண்டி குட்டி சாம்பானின் மகன் ஆதி நன்றாக படித்து, அந்த காலத்திலேயே, சென்னையில் பிரசித்தமான பிரசிடென்சி கல்லூரியில் போய் இன்டர்மீடியட் படிப்பில் சேருகிறான்! அவனுடைய மாவட்டத்திலேயே அவன் ஒருவன் தான் பிரசிடென்சி கல்லூரியில் சேரும் அளவு தகுதி பெற்று இருக்கிறான். இதற்கு உதவி ஒரு பிராமண தலைமை ஆசிரியர் செய்கிறார். கல்லூரி படிப்பின் பின் பிரிட்டிஷ் அரசின், அதிகாரம் வாய்ந்த பத்திர பதிவுத்துறையில் நுழைகிறான் குட்டி சாம்பானின் மகன் ஆதி ! அவன் இப்போது சர்க்கார் ஊழியன். யாரும் அவனை சீண்ட முடியாது.தீண்டத்தகாதவனாக நடத்த முடியாது.அப்படி செய்தால்,அது பிரிட்டிஷ் அரசை அவமதித்ததாக கருதப்படும்!ஆதி பதவி உயர்வு பெற்று மாவட்ட பதிவாளராக ஆகி ஓய்வு பெறுகிறார்.

                             ஆதியின் நான்கு மகன்களும் சுதந்திர இந்தியாவில் நல்ல உயர்ந்த பதவிகளை பெறுகிறார்கள். அதில் இரண்டாவது மகன் சூரஜ் ஒரு பெரிய வங்கியில் நேரடி அதிகாரியாக நுழைந்து, எப்படி சவால்களை சந்திக்கிறான் என்பது கதையின் மீதி பகுதி.சூரஜ் முன்னேற கூடாது என்று உள்ளிருக்கும் ஒரு கூட்டம் சதி செய்கிறது. சூரஜ் அவர்களை, அவர்களின் ஆயுதம் கொண்டே வெல் கிறான். அவர்களிடமி ருந்து சூழ்ச்சி செய்வது எப்படி என்று அறிந்து கொள்கிறான். அவர்களின் ஆயுதம் கொண்டு அவர்களையே வீழ்த்துவது சுவையாக சொல்லப்பட்டிருக்கிறது.

                      இது திரைப்படமாக எடுப்பதற்கு மிகவும் ஏற்ற படம். அசுரன், கர்ணன் போன்ற படங்களை விட விறுவிறுப்பான கதை. தனுஷ், பா. ரஞ்சித், வெற்றிமாறன் போன்றவர்களின் பார்வைக்கு இந்தத் திரைக்கதையை கொண்டு சென்றால், இதை வைத்து நிச்சயமாக திரைப்படம் எடுப்பார்கள் என்று நம்புகிறேன்.

Tuesday 29 June 2021

புதிய கல்விக் கொள்கையும் தாய்மொழிகள் அழிப்பும்.



. "இந்தியாவிலேயே முதன் முதலாக இந்தியை ஆட்சி மொழியாக அறிவித்த பீகாரின் நிலையைப் பாருங்களேன்!"
1. "ஆனால் பீகாரின் தாய்மொழி போச்புரி மற்றும் மைத்திலி.'
'உத்திரப்பிரதேசமும் இந்தியை ஆட்சி மொழியாக அறிவித்த ஒரு மாநிலம்தான்!"
"அதன் முன்னேற்றத்தையும் நண்பர்கள் ஆய்வு செய்து கொள்ளுங்கள்?"
2. "ஆனால் வடமேற்கு உ.பியின் தாய்மொழி பிரஜ் பாஷா, தென்மேற்கு உ.பியின் தாய்மொழி புந்தேல்கண்டி!
வடகிழக்கு உ.பி யின் தாய்மொழி போஜ்புரி, பிரதாப்கர்!
மத்திய உ.பி யில் பேசப்படுவது ஆவ்தி,பிறகு கன்னோஜி என்கிற மொழியும் பேசப் படுகிறது!"
"அடுத்ததாக உத்தராகண்ட் மாநிலத்தின் ஆட்சிமொழியும் ஹிந்திதான் போதாதற்கு சமஸ்கிருதம் additional அலுவலக மொழி."
3. "ஆனால் உத்ராகண்டின் உண்மையான தாய்மொழி கடுவாலி மற்றும் குமோனி!"
"அடுத்து ஹரியானா மாநிலத்தின் அலுவலக மொழியும் இந்திதான் !"
4, 'ஆனால் தாய்மொழி ஹரியான்வி!'
"ராஜஸ்தானில் ஆட்சி மொழி ஹிந்தி!"
5. "ஆனால் தாய்மொழிகள் ராஜஸ்தானி, மார்வாரி, மேவாரி!
'"மத்யபிரதேசத்தின் ஆட்சி மொழி இந்தி!"
6. "ஆனால் தாய் மொழிகள் உருது, மால்வி, நிமதி, அவதி,
பகேலி!"
7. 'காஷ்மீரின் தாய்மொழி காஷ்மிரி மற்றும் உருது!"
8. 'ஜம்முவின் தாய்மொழி டோக்ரி, பாடி!'
9. "லடாக்கின் மொழி லடாக்கி, ஆட்சி மொழியாக இந்தி சமீபத்தில் அறிவிக்கப் பட்டுள்ளது!"
10. "சட்டீஸ்கரில் தாய்மொழி சட்டீஸ்கரி, கோர்பா, ஆனால் ஆட்சிமொழியாக ஹிந்தி!"
11. "'ஜார்கன்டில் தாய்மொழி ஜார்கன்ஷி,சந்த்தலி!
ஆட்சி மொழி இந்தி!"
அ) "மேற்கூறிய மாநிலங்களில் அவர்களின் தாய்மொழியில் இலக்கியங்களோ படைப்பு க்களோ வருவதில்லை!
வரி வடிவமற்ற வெறும் பேச்சு மொழிகளாக அவை மாறி, சுருங்கிவிட்டன!"
ஆ) "இந்தி மொழி வந்து ஆளுமை பெற்றதால் உண்மையான தாய் மொழிகள் எந்த ஒரு வளர்ச்சி யும் இல்லாமல் அழியும் நிலையை எட்டிவிட்டன!"
இ.) "ஏனென்றால் தாய்மொழி அவர்களுக்கு அவசியமற்றதாகி விட்டது. "
ஈ) "அவர்கள் தாய் மொழியில் படித்தால் அவர்கள் ஊரிலேயே வேலை கிடைக்காது என்பதால் தாய்மொழி வெறும் வாய்மொழி ஆகிப்போயின.'
உ)" கல்விநிலையங்களில் கற்பிக்கப்படுவதில்லை.'
i) "சரி ! மேற்கூறிய மாநிலங்களில் இந்தியை ஆட்சி மொழியாக ஏற்றுக் கொண்டதால் பொருளாதார வளர்ச்சி கிடைத்துவிட்டதா என்றால் இல்லை."
ii) "தாய்மொழியை ஆட்சி மொழியாகக்கொண்ட தமிழகத்தைவிட பின்தங்கியே உள்ளன.'
iii) 'சரி! கல்வியளிப்பதிலாவது வளர்சியடைந்துள்ளதா என்றால் அதிலும் தமிழகத்தைவிட பலமடங்கு பின்தங்கியே உள்ளன!"
iv) "பிறகெதற்கு நம்மீது மும்மொழிக் கொள்கை என்று இந்தியைத் திணிக்கிறார்கள் என்றால் இந்தி பேசும் மாநிலத்தினருக்கு தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பைப் பெறுவதும்,தொழில் மேற்கொள்வதும் ஏன் தேர்தல் பிரச்சாரம் செய்வதும்கூட எளிமையாக இருக்க வேண்டுமல்லவா?"
"நான் உன்னோடு தொடர்பு கொள்ள எனக்குச் சிரமமாக இருக்கிறது. அதனால் நீ என் மொழியைக் கற்றுக்கொள் என்பது எவ்வளவு திமிரான அடக்குமுறை?"
'அந்த அடக்குமுறைதான் நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கிறது; புதிய. கல்விக் கொள்கை வாயிலாக ..., "
இதை தயவுசெய்து அரசியலாக்க வேண்டாம்!"
இவண்
பகிரதன்
பட்டுக்கோட்டை
---------------------------------------------------------------------------------------------------------------------------