Tuesday, 1 June 2021

ஸ்டாலின் கீழ் தி .மு .க ஆட்சி --10 நாள் சுவை !

 


                   'ஸ்டாலின்தான் வராரு, விடியல் தர போறாரு 'என்ற மனம் கவர் மெட்டோடு ஒரு  பாடல் தமிழகமெங்கும் தேர்தலுக்கு முன் பட்டிதொட்டியெல்லாம் ஒலித்தது. இப்போது ஒரு வழியாக தேர்தல் முடிந்து விட்டது .தமிழகம் பயந்தது போல் வாக்கு இயந்திரத்தின் கற்பும் பறிபோகவில்லை . ஸ்டாலின் வந்து விட்டார்.ஆட்சி கட்டிலில் ,பெரும்பான்மையோடு அமர்ந்து விட்டார் .

அடுத்த கேள்வி ,ஆக ,அவர் உறுதியளித்த  விடியல் தந்துவிட்டாரா ?

                                இந்த கேள்விக்கு பதிலளிக்க பத்து நாள் உண்மையில் பத்தாது.பொதுவாக ,100 நாள் ஆட்சியை தான் நிறுத்து பார்ப்பார்கள் . ஆனாலும் இந்த பத்து நாளில் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் செய்தது இனி வரப் போன நாட்களில் அவர் செய்யப்போவதை  காட்டும் ஒரு முன்னோட்டமாக எடுத்தோம்  என்றால் ,நிச்சயமாக விடியல் வெகு வெளிச்சமாகவே  ஆரம்பித்துவிட்டது எனலாம் .இந்த 10 நாளில்  அவர் என்ன செய்திருக்கிறார் என்பதை பார்ப்போம்.

  • இதுவரை இல்லாத ஒரு புதிய அரசியல் நாகரிகத்தை தமிழ்நாட்டு அரசியலில் நுழைத்திருக்கிறார் திரு ஸ்டாலின் அவர்கள் .எதிர்க்கட்சி தலைவரை கடைசி வரிசையில் அமர வைத்து அவமானப் படுத்திய  சர்ச் பார்க் எனும் பெரிய ஆங்கில கான்வென்டில் படித்த அம்மாவுக்கு  நேர்மாறாக,திரு  ஓ .பன்னீர்செல்வம் அவர்களுக்கு  தேனீர் விருந்து அளித்து  முதல்வர்  ஸ்டாலின் அவர்கள் உயர்ந்து நிற்கிறார் .அதேபோல் தினமும்  வசைபாடும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை  நாகரீகமாக வரவேற்றது போன்ற பல காரியங்களை செய்கிறார் ஸ்டாலின் அவர்கள் .கலைஞர்  இறந்தவுடன் மெரினா கடற்கரையில் அவருக்கு சமாதி அமைக்க ஸ்டாலின் அவர்கள் எடப்பாடி பழனிசாமி அவர்களை சந்தித்து கெஞ்சி கூத்தாடி தான் வாங்கினார். ஆனால் இன்று எடப்பாடி அவருடைய அரசு வீட்டை காலி பண்ணாமல் நீடிக்க ஸ்டாலின் அவர்களிடம்  கேட்டவுடன் உடனே அதற்கு சம்மதம் தெரிவித்தது , இரண்டு பேருக்கும் உள்ள ஒரு வேறுபாடு மலைக்கும் மடுவுக்கும்  உள்ளது போல் தெளிவாக தெரிகிறது.
  • ஸ்டாலின் அவர்கள் அரியணை ஏறும் நேரம் நல்ல நேரம் அல்ல.கொரோனாவின்  இரண்டாவது அலையில் மக்கள் திண்டாடிக் கொண்டிருக்கும் ஒரு கொடுமையான நேரம் .அரியணையில்  அவர் அமர்ந்த உடன்  சூழ்ந்து நிற்கும்  பல சவால்கள்.முதல் சவால் கொரோனாவிடமிருந்து இவருக்கு வாக்களித்த பொது மக்களை காப்பாற்ற வேண்டும். இதை  ஸ்டாலின் அவர்கள் மிகவும் திறமையாக கையாண்டு நல்ல பேர் வாங்கி விட்டார். முதல் இரண்டு நாட்களுக்குள் அதிகாரிகள் எல்லோரையும் ஒருங்கிணைத்து  ஒரு கொரோனா கட்டுப்பாடு கட்டளை மையத்தை உருவாக்கி ,கொரோனா பரவாமல் தடுத்தார் .இருக்கும் மருத்துவ கட்டமைப்பை திறம்பட பயன் படுத்த வழி வகை செய்தார் .
  •  தேர்தலுக்கு முன்னர் வாங்கிய புகார் மனுக்களை உடனே சரி  செய்ய ஒரு தனித் துறையை உருவாக்கி அதற்கு ஒரு ஐஏஎஸ் அதிகாரியை நியமித்தது பாராட்டுக்குரியது .
  •  ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு விஷயத்தில் நீதிபதி  அருணா ஜெகதீசன் அவர்கள் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் பல  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 93 பேருக்கு தலா ஒரு லட்சம் வைத்து இழப்பீடு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது .
  • பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் முதல் நாளிலே அறிவிக்கப்பட்டது.
  •  இவ்வாறாக இன்னும் பல நெடுநாள் காத்திருந்த காரியங்கள் உடனே செயல் படுத்தப்பட்டது .முதல்வர் ஸ்டாலின் அவர்கள் 10 நாளில் எடுத்த எல்லா முடிவுகளையும் நாம் இந்த பதிவில் அடக்கவில்லை .அதற்கு  இடமும் இல்லை.
  • எல்லாவற்றிலும் ஒரு  வெளிப்படைத்தன்மையும்  நம்பகத்தன்மையும் உள்ளது . 
  • முடிவுகள் வேகமாகவும் ,திறம்படவும் எடுக்கப்படுவது சிறப்பு .
  • அதிகாரம் முறையற்ற வழிகளில் கசியவில்லை என்பதும் சிறப்பு .

முதல்வரை சூழ்ந்திருக்கும் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் என்ன என்ன ?முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பல சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற்று விட்டார் .ஆனால், இன்னும் பல சவால்கள் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது என்பதை மறுக்கமுடியாது .அவைகள்  என்ன என்ன என்பதை பார்க்கலாம்.

  •  முதலாவதாக மத்திய அரசிடம் மாநிலம் பெறவேண்டியதை சரியான உத்தியில் பெறுவது .இதைப் பொறுத்தவரையில் இதுவரையில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மத்திய அரசை கேட்டுக் கொண்ட கொரோனா  கட்டுப்பாடு மருந்துகள், மற்ற உதவிகள் எல்லாம் திருப்திகரமாகவே  வந்து கொண்டிருக்கிறது .முந்திய ஆட்சியை விட மத்திய அரசு முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் கொஞ்சம் சீக்கிரமாகவே செயல்படுவதாக தெளிவாக தெரிகிறது. ஆனாலும், குஜராத் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களுக்கு ஒரு தனி கவனிப்பு நடப்பதை மறுக்க முடியவில்லை. இதையெல்லாம் மெதுவாக,ஆனால் ஒரு கண்டிப்புடன் ஸ்டாலின் அவர்கள் ஒன்றிய அரசை கேட்டு வாங்கிக் கொள்வார்கள் என்பதில்  சந்தேகமில்லை.
மொத்தத்தில் இந்த பத்து நாள் ஆட்சிக்கு நாம் எளிதாக ஐந்துக்கு நாலு நட்சத்திரம் என்று மதிப்பீடு கொடுக்கலாம். இந்த கஷ்ட காலத்திலும் இவ்வளவு செய்தார் என்பது பெருமைக்குரிய விஷயம் .



இது ஒருபுறமிருக்க,இன்னும்  செய்யவேண்டிய பல காரியங்கள் உள்ளன. குறிப்பாக, இதுவரை அவர்    தமிழர்களுக்கு 75 சதவீத வேலைவாய்ப்பு என்பதை குறித்து ஒன்றும் சொல்லவில்லை. அதை செய்ய வேண்டும் .இரண்டாவதாக அவருடைய வெற்றிக்கு இரவு பகல் பாராது  உழைத்த தொண்டர்களுக்கு ஏதாவது பரிசு கொடுக்க வேண்டும். இந்த ஐந்து வருட ஆட்சியில் அதிமுகவை இல்லாத கட்சியாக மாற்ற வேண்டும். வளர்ந்து வரும் தமிழ்த் தேசிய உணர்வுக்கு  மதிப்பளித்து தமிழர்களுக்கு ஆட்சியில்  அதிக உரிய பங்கு கொடுக்க வேண்டும்.

எனினும்  தமிழர்களுக்கு ஒரு விடியல்  வந்துவிட்டது என்பதை நாம் மறுக்க முடியாது.


No comments:

Post a Comment